சத்தியம் மக்கள் சேவை மையம்

Wednesday, June 13, 2007

இன்று சே குவாரா பிறந்தநாள்..

இன்று சே குவாரா பிறந்தநாள்..
சே குவேரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

 
சே குவேரா
சே குவேரா

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்ற்றோ குவேரா டி லா செர்னா (Ernesto Guevara de la Serna) ( ஜுன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) ஆஜன்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

மார்க்சியத்தில் ஈடுபாடு

மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும்போது சே இலத்தீன் அமெரிக்கா முழுவதும் கடினம் மிக்க பயணங்களை மேற்கொண்டிருந்தார். அப்பயணங்களின்போது அங்கு நிலவிய வறுமையின் தாக்கத்தினை நேரடியாக உணர்ந்திருந்தார். இந்த அனுபவங்கள் மூலம் அப்பிரதேசத்தில் இருந்த பொருளாதார ஏற்றத் தாழ்வுகளுக்கு புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என சே நம்பினார். இது சே மார்க்சியம் கற்றுக்கொள்ளவும் குவாட்டமாலாவில் நடைபெற்ற சோசலிசப் புரட்சியில் ஈடுபடவும் வழிவகுத்தது.

கியூபாவில் புரட்சி

சில காலத்தின் பின்னர் சே குவேரா தன்னை பிடல் காஸ்ட்ரோவின் போராட்ட இயக்கத்தில் இணைத்துக்கொண்டார். அவ்வியக்கம் 1959 இல் கியூபாவின் ஆட்சி அதிகாரத்தினைக் கைப்பற்றியது. கியூபாவின் புதிய அரசில் பல முக்கியமான பதவிகளை சே குவேரா வகித்திருந்தார். அக்காலகட்டத்தில் கரந்தடிப் போர்முறை பற்றிய பல கட்டுரைகளையும், புத்தங்களையும் எழுதியிருந்தார். அதன்பின்னர், கொங்கோ-கின்ஸாசா (தற்போது கொங்கோ ஜனநாயகக் குடியரசு) மற்றும் பொலிவியா போன்ற நாடுகளின் சோசலிசப் போராட்ட வளர்ச்சிக்கு தனது பங்களிப்பினை அளிப்பதற்காக 1965 ஆம் ஆண்டில் கியூபாவில் இருந்து வெளியேறினார்.

பொலிவியாவில் சே குவேரா

பொலிவியாவில் சி.ஐ.ஏ மற்றும் அமெரிக்க சிறப்பு இராணுவத்தினது இராணுவ நடவடிக்கை ஒன்றின்போது சே கைது செய்யப்பட்டார். பொலிவிய இராணுவத்தினரால் வல்லெகிராண்டிற்கு அருகில் உள்ள லா கிகுவேரா என்னுமிடத்தில் ஒக்டோபர் 9, 1967 இல் சே குவேரா கொல்லப்பட்டார். சாட்சிகள் மற்றும் கொலையில் பங்குபற்றியவர்களிடமிருந்து கிடைத்த தகவலின்படி, சட்டத்தின் முன் நிறுத்தப்படாமல் கொல்லப்பட்டது உறுதிப்படுத்தப்படுகிறது.கைதியாக அகப்பட்டு நின்ற நேரத்தில் கூட மரணத்தை வரவேற்றார்.தன்னை கொல்ல வந்தவனைப் பார்த்தும் ஒரு நிமிடம் பொறு நான் எழுந்து நிற்கிறேன் பிறகு என்னை சுடு என்று கூறி எழுந்து நின்றிருக்கிறார்.(காலில் அப்போது குண்டடி பட்டிருந்தது)

அவரது மரணத்தின்பின், சே குவேரா உலகிலுள்ள சோசலிச புரட்சி இயக்கங்களினால் மிகவும் மரியாதைக்குரியவராக கொண்டாடப்படுகிறார்.

கவனம் பெறும் நிகழ்வுகள்

வெளி இணைப்புகள்

 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:17 PM 0 comments

Tuesday, June 12, 2007

உலக குழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம்

உலக குழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினம்

 
இன்று ஜூன் 12 , உலகம் முழுவது உலக குழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்படுகின்றது. இப்படி ஏராளமான தினங்களை அனுசரிப்பதால் என்ன பயன் என்ற கேள்வி எழுவது நியாயமே. இப்படிப்பட்ட தினங்கள் நம்மில் நிலவும் அவலங்களை நினைவுறுத்தி நமக்கு இந்த சமுதாயத்தில் செய்ய வேண்டிய கடன்கள் இருக்கின்றது என்பதனை நினைவுறுத்தவே.

 

சென்ற வருடம் 2006 கணக்கின் படி உலகில் சுமார் 218 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் இருக்கின்றார்கள்.இதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண் குழந்தைகள்.

இந்த வருடத்தின் நோக்கம் குழந்தை தொழிலாளர்களை விவசாயத்துறையில் இருந்து மீட்க வேண்டும் என்பதே. குழந்தை தொழிலாளர்கள் அதிகம் இருப்பது விவசாயத்துறையில் தான். இந்தியாவில் சுமார் 15 மில்லியன் குழந்தை தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர்.தங்கள் எஜமானர்களுக்கு விசுவாசமாக விவசாயத்தில் துணை புரிகின்றனர். ஆடு மாடுகளை மேய்த்தும்,பயிர்களை பராமரித்தும், இன்னபிற வேலைகளை கல்வி பெறும் நேரத்தில் செய்து வருகின்றனர். நம் வீட்டு குழந்தை எப்படி நன்றாக இருக்க ஆசைப்படுகின்றோமோ அதே போல அனைத்து குழந்தைகளும் இருக்கவேண்டும் என்று ஆசை கொள்வோம்

 

குழந்தை தொழிலாளர்களற்ற ஒரு சமூகத்திற்காக கனவு காண்போம். அதற்காக நம்மால் முடிந்த உதவிகள் புரிவோம்.இயன்ற அளவு மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம். வலுவான உலகளாவிய இயக்கம் துவங்கப்பட்டு  உலகில் குழந்தை தொழிலாளர்களே இல்லல என்ற நிலை வரவேண்டும்.

செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 9:21 PM 0 comments

Monday, June 11, 2007

செவ்வணக்கம் தோழர்களே......ஒரு வேண்டுகோள்...

செவ்வணக்கம் தோழர்களே......
 
ஈழத்தில் நம் தமிழ் மக்கள் பட்டினி கிடப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையில் ஈழத்தமிழ் மக்களுக்கு உதவ வேண்டியது நமது கடமையாகும். இதனை உணர்ந்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு கடந்த திசம்பர் மாதம் எடுத்த முடிவின் பேரில் கடந்த சனவரி முதல் தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக உதவ உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிக்கும் பணி நடைபெற்றது. சேகரிக்கப்பட்ட அப்பொருட்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் ஈழத்திற்கு அனுப்ப தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்திருந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஏனோ அதற்கு அனுமதி மறுத்து வருகிறது. 
 
மனிதநேயற்ற முறையில் நடந்து கொண்டிருக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும், அப்பொருட்களை மனித நேய உணர்வுடன் ஈழத்தமிழ் மக்களுக்கு கொடுத்து உதவவும் வேண்டி சென்னையில் கடந்த 5ம் திகதி சூன் 2007 அன்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் தலைவருமான பழ.நெடுமாறன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெற்றது. பெரும் திரளான தமிழ்இன உணர்வாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.
 
அந்நிகழ்வின் ஒரு பகுதியாக தமிழக முதல்வருக்கு இது குறித்து மடல் அனுப்ப முடிவுசெய்யப்பட்டது. அதற்கான மடலும் வெளியிடப்பட்டுள்ளது. 
 
கீழ்க்கண்ட கடிதத்திற்கு நகல்கள் எடுத்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் உணர்வாளர்கள் ஆகியோருக்கு வழங்கி அவற்றை உடனடியாக முதலமைச்சருக்கு அஞ்சல் அல்லது தொலைநகலி ஆகியவற்றின் மூலம் அனுப்ப உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கிறோம்.
 
முதலமைச்சருக்கு அனுப்ப வேண்டிய கடிதம்
 

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்
முதலமைச்சர், தலைமைச் செயலகம்,
சென்னை-600 009.
மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு,
வணக்கம். இலங்கையில் யாழ்ப்பாணம் செல்லும் சாலையை மூடி யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் செல்லவிடாமல் சிங்கள அரசு தடுத்து வருவதன் விளைவாக சுமார் 5 இலட்சம் மக்கள் பட்டினியுடன் வாடுகிறார்கள் என்ற செய்தியை அறிந்து தமிழக மக்களிடம் உணவுப் பொருட்கள் மருந்துகள் ஆகியவற்றைத் திரட்டி அனுப்பி வைப்பது என முடிவுசெய்து கடந்த டிசம்பர் மாதம் 9ம் தேதி இதற்கான முயற்சிகளைத் தொடங்கினோம். தமிழகம் பூராவிலும் பல்வேறு அமைப்புகளும், தனிநபர்களும் மனித நேய உணர்வுடன் இம்முயற்சியில் ஈடுபட்டு உணவு மருந்துப் பொருட்களைத் திரட்டினர். அவற்றைக் கையளிக்கும் விழாக்களும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றன.
சுமார் 1 கோடி ரூபாய் பெறுமானமுள்ள அரிசி, மற்றும் மருந்துப் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன் இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் தமிழக நிர்வாகிகளைச் சந்தித்து இப்பொருட்களைக் கையளிப்பது குறித்துப் பேசினோம். அவர்களும் இப்பொறுப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கத் தலைமைக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்தினார்கள்.
கடந்த 14-02-07 அன்று இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் சார்பில் இப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பதற்கு இந்திய அரசின் அனுமதி கேட்டு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திடமிருந்து பல நினைவூட்டுக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. ஆனாலும் இதுவரை இப்பொருட்களை அனுப்புவதற்கான அனுமதி கிடைக்கவில்லை.
சேகரிக்கப்பட்ட அரிசி, பருப்பு போன்றவை பூச்சி, வண்டுகள், எலிகள் போன்றவற்றால் பாதிக்கப்படும் அபாயமும் சேகரிக்கப்பட்ட மருந்துப் பொருட்கள் காலாவதியாகிவிடக்கூடிய அபாயமும் உள்ளன. உரியவேளையில் இவை யாழ் மக்களுக்குக் கிடைக்கும்படி செய்தால்தான் பயன் உண்டு. பட்டினியால் வாடிக்கொண்டிருக்கும் மக்களுக்கும், மருந்துகள் பற்றாக்குறையினால் பெரும் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் நோயாளிகளுக்கும் உதவவேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டு மக்கள் திரட்டித்தந்த இந்தப் பொருட்களை அனுப்பவிடாமல் இந்திய அரசு தாமதம் செய்வது சரியல்ல.
இந்திய செஞ்சிலுவைச் சங்கம் உலக ரீதியில் இயங்கக்கூடிய பொதுவான அமைப்பு. அதன் மூலம் இப்பொருட்களை அனுப்ப நாங்கள் முயற்சிசெய்கிறோமே தவிர வேறு சட்டவிரோதமான வழியில் அல்ல.
எனவே தாங்கள் உடனடியாகத் தலையிட்டு இந்திய அரசிடமிருந்து உரிய அனுமதியைப் பெற்றுத் தந்து இப்பொருட்களை பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு அனுப்ப உதவும்படி வேண்டிக்கொள்கிறோம்.
அன்புள்ள,

முதலமைச்சரின் தொலைநகலி எண்

044-28111133

 
தோழமையுடன்
க.அருணபாரதி
தலைவர்,
சத்தியம் மக்கள் சேவை மையம்
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 3:47 AM 0 comments

Monday, June 4, 2007

பட்டினிச்சாவின் விளிம்பில் யாழ். குடாநாட்டின் 5 லட்சம் மக்கள்

பட்டினிச்சாவின் விளிம்பில் யாழ். குடாநாட்டின் 5 லட்சம் மக்கள்
ஞாயிற்றுக்கிழமை, 3 யூன் 2007, 06:16 ஈழம் அ.அருணாசலம்
நன்றி: புதினம் 
 

யாழ். குடாநாட்டுக்கு உணவுப் பொருட்களை ஏற்றிச் செல்வதற்கு குறைந்த அளவு கப்பல்களே உள்ளதனால் அங்கு வாழும் 5 லட்சம் மக்கள் பட்டினிச்சாவின் விளிம்பில் இருப்பதாக மனிதாபிமான அமைப்புக்கள் கடந்த வாரம் தெரிவித்துள்ளன.

இந்த அச்சறுத்தலினால் யாழ். குடாநாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 75 வீதங்களாக அதிகரித்துள்ளன. இது மக்களுக்கு பெரும் பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.

யாழ். குடாநாட்டில் உள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப்பொருட்களில் 20 வீதமான உணவுப் பொருட்களையே கொண்டு செல்லக்கூடியதாக உள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் உலக உணவுத் திட்டத்தின் பணிப்பாளர் ஜெப்ஃ ரப்ற் டிக் தெரிவித்துள்ளதாவது:

யாழ். குடாவில் உள்ள மக்களின் தேவைக்கு மாதத்திற்கு 1,000 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் தேவை. அரசினது கப்பல்களில் போதிய இடவசதிகள் இல்லாததால் உலக உணவுத் திட்டம் ஒரு மாதத்திற்கு 200 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களையே தற்போது தருவித்து வருகின்றது.

 


எனினும் கடந்த 3 மாதங்களாக இடம்பெயர்ந்த மக்களுக்கான உணவு விநியோகம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் 11 ஆம் நாளில் இருந்து இன்று வரை 200 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களையே உலக உணவுத் திட்ட அமைப்பு குடாநாட்டுக்கு தருவித்துள்ளது.

யாழ். குடாநாட்டில் தற்போது 250 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களே கையிருப்பில் உள்ளன. நிவாரண உணவுப் பொருட்களின் விநியோகம் கடந்த ஏப்பிரல் மாதம் முதல் வாரத்தில் வழங்கப்பட்ட பின்னர் உணவுப் பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அது இடைநிறுத்தப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனிடையே யாழ். குடாநாட்டில் மட்டுமல்லாது மட்டக்களப்பு, கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலும் உணவுப் பற்றாக்குறை நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

மட்டக்களப்பில் உள்ள 138,597 இடம்பெயர்ந்த மக்களுக்கு அவசர உணவு உதவிகள் தேவைப்படுவதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளுக்கு தேவைப்படும் உணவின் அளவில் 11 வீதமான உணவுப் பொருட்களே கடந்த மாதம் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.

படப்பிடிப்பு: போராளி கஜானி
நன்றி: அப்பால் தமிழ்

------------------------------------------------------------------------------------------ 
நன்றி : புதினம் செய்திகள்
------------------------------------------------------------------------------------------ 
 
இதற்கிடையே
ஈழத்தமிழர்களுக்காக தமிழக மக்களிடம் திரட்டப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை
இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலம் ஈழத்திற்கு அனுப்புவதற்கு
அனுமதி மறுத்த மனிதநேயமற்ற மத்திய அரசை கண்டித்தும்
உணவுப் பொருட்களை உடனடியாக ஈழத்திற்கு அனுப்பக் கோரியும்
சென்னையில்
நாளை(05-06-07) செவ்வாய் அன்று
தமிழர் தேசிய இயக்கத் தலைவரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமாக திரு.பழ.நெடுமாறன் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது...
------------------------------------------------------------------------------------------ 
 
செய்தியாளர், செய்தி சேர்க்கப்பட்ட நேரம்: 12:27 AM 0 comments